Friday, August 25, 2023

குமரித் தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் வரலாறு
 TAMILSANJIKAI TEAM

செப்டம்பர் 24, 2018 0 COMMENTS 6658 
குமரித் தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் வரலாறு
தென் தமிழ்நாட்டின் கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தவப் புதல்வனாகப் பிறந்தவர் மார்ஷல் ஏ. நேசமணி. இவர் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா, பள்ளியாடி எனும் நேசபுரத்தில் 1895-இல் ஜூன் 12-ஆம் தேதி அப்பாவு-ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்து வளர்ந்தார். தன் தாயின் ஊரான கல்குளம் வட்டத்தை சார்ந்த மாறாங்கோணம் என்னும் இடத்தில் பிறந்தார். இதனால் இவருக்கு நாயர்களின் அடக்கு முறையை நேரடியாக உணர வாய்ப்பு கிடைத்தது. இவர் முதலில் திருநெல்வேலி ஸ்காட் கிருத்துவ உயர் நிலைப் பள்ளியில் படித்துவிட்டுப் பின்னர் திருநெல்வேலி சி.எம்.எஸ். கல்லூரியில் படித்தார். அதன் பின்னர் திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்து ஒரு வருடம் கர்னூல் பிஷப் ஹீபர் உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார், பின்னர் திருவனந்தபுரம் சால்வேஷன் ஆர்மி பள்ளியில் இவர் தலைமை ஆசிரியரானார். அதே நேரத்தில் இவர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார். பின்னர் நாகர்கோவில் நீதிமன்றத்தில், 1921 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து கிரிமினல் துறை வக்கீலாக பணியாற்றத் தொடங்கினார்.



நாகர்கோவில் நீதிமன்றத்தில் உயர் சாதி வழக்கறிஞர்கள் உட்கார நாற்காலியும் கீழ்சாதி வழக்கறிஞர்களுக்கு குந்துமனையும்(Stool) இடப்பட்டிருந்ததை, முதல் நாளன்றே காலால் உதைத்துத் தள்ளிவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்து நீதிமன்றத்தில் சாதிக் கொடுமையை ஒழித்தார். அதே போன்று நாகர்கோவில் பார் அசோசியேஷன்(Bar Association)-ல், மேல் சாதி வழக்கறிஞர்களுக்கும் கீழ் சாதி வழக்கறிஞர்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப் பானையை உடைத்துவிட்டு, அனைத்து வழக்கறிஞர்களுக்கும் பொதுவாக ஒரே பானையை வைத்தார். அந்த அளவிற்கு சமுதாய சீர்திருத்தத்தில் அக்கறை எடுத்துக் கொண்டார். நாகர்கோயில் பார் அசோசியேஷனுக்கு இவர் தலைமைப் பொறுப்புக்கு 1943-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் இவர் நாகர்கோயில் நகரசபைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1943 முதல் 1947 வரை நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராக இருந்தார்.



டிசம்பர் மாதம் 1944-இல் இவர் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனும் அமைப்பைத் தோற்றுவித்தார். 1945 முதல் 1947 வரை திருவாங்கூர் சட்டமன்றமான திருமூலம் சபையில் உறுப்பினர் ஆனார். திருவாங்கூர் பல்கலைக் கழக நியமன உறுப்பினராகவும் ஆனார். 1947 அக்டோபரில் இவரது திருவாங்கூர் காங்கிரஸ்-ஐ ஒரு அரசியல் கட்சியாக மாற்றி அமைத்தார். 1948 முதல் 1952 வரை உள்ள கால கட்டத்தில் திருவாங்கூர் கொச்சி சட்டசபையில் திருவாங்கூர் காங்கிரஸ்-இல் சட்டமன்ற கட்சி தலைவராக இருந்தார். 1955 முதல் 1956 வரை இவர் அந்தக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். 1951, 1962, 1967 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் இவர் நாகர்கோயில் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தார். பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமர் நேருவால் பாராட்டப்பட்டார். அப்போதெல்லாம் இவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

தமிழ்நாடு சட்டமன்றத்திலும் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்டு இவர் காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக தான் இறக்கும் வரை பணியாற்றினார். அரசியலில் இவரது முக்கிய பங்கு கன்னியாகுமரி பகுதியை திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரித்து தமிழ்நாட்டில் சேர்க்கப் போராடியதுதான். இந்தியா சுதந்திரம் பெற்ற போது, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. திருவாங்கூர் சமஸ்தானம் இந்தியாவில் மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த சமஸ்தானங்களில் ஒன்று. மிகப் பழமையானதும், சில தனித்துவ குணங்கள் அமைந்ததுமாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். ஆனால், அங்கு பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்தனர். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது குமரி மாவட்டம் கேரளாவின் ஆளுகைக்குள் சென்றது. திருவாங்கூர் ராஜ வம்சத்தின் ஆட்சியில் மக்களில் உயர்மட்டத்தில் இருந்தோருக்கு நல்ல வசதியும், வாழ்க்கையும், பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. கீழ் மட்டத்திலிருந்தவர்கள் உரிமைகள் பல பறிக்கப்பட்டிருந்தன. இதுபோன்ற சமூக அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், இது போன்ற நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடத் துவங்கினார்கள்.



கேரளத்தில் நாயர் சேவை இயக்கம் போன்ற அமைப்புகள் இதுபோன்ற சூழ் நிலையில்தான் தோன்றின. இந்த சமுதாய விடுதலை இயக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாகவும் உருவாயிற்று. இந்த போராட்டத்தை அடக்க, கேரள அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டது. திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனும் அமைப்பின் சார்பில் மார்ஷல் ஏ. நேசமணி தலைமையில் இந்த போராட்டம் எழுச்சி பெற்றது. இந்த அமைப்பின் முதல் முக்கிய நோக்கமாக திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சமுதாய அடக்குமுறைகளை எதிர்த்துத்தான் இருந்தது. இதே அமைப்பு பின்னர் அரசியல் இயக்கமாகவும் மாறி உருவெடுத்தது. இந்த அமைப்பு தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்தது. இவர்களுடைய நீண்ட போராட்டத்துக்கு பின், 1956 நவம்பர் 1-இல் மொழிவழி மாகாண பிரிவினையின் போது கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. இந்த இணைப்பிலும், சமுதாய நலன் காக்கும் போராட்டத்திலும் மார்ஷல் ஏ.நேசமணியும், பி.தாணுலிங்க நாடாரும் முன்னிலை வகித்து நடத்தினர். அதன் பின், குமரி மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளை பெற்றது. இந்தியாவின் தென் எல்லை குமரி மாவட்டமாக மாறியது.

சுப்பிரமணிப்பிள்ளை என்ற பி.எஸ்.மணி. கூறுகிறார்: "கழிந்த 30 ஆண்டுகளாக நான் உங்களை (நேசமணியை) அறிவேன். இதில் கழிந்த 17 ஆண்டுகளாக நான் உங்களுடன் சேர்ந்தும், பிரிந்தும், தூர நின்றும் உங்களை கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட மக்களில் பெரும்பான்மையோர் உங்களிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதை காணுகிறேன். நீங்களும் இனி கட்சிசார்பற்ற உயரிய நிலையில் குமரி மக்களின் தந்தையாக அறிவுரை கொடுப்பவராக இருக்க வேண்டுமென்பது என் எதிர்பார்ப்பு". இந்த சாதனைகளின் காரணமாக பி. எஸ். மணி நேசமணிக்கு "குமரித் தந்தை" என்ற பட்டத்தை அளித்தார். திருவாங்கூர் தமிழர்களை ஒன்றுபடுத்திய செயலுக்காக இவர் மார்ஷல் என்றும் அழைக்கப்பட்டார். இதனால் இவர் மார்ஷல் நேசமணி என்று இம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இந்த இணைப்புக்குப் பின் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது. செயற்கரிய சாதனைகளைப் புரிந்த மார்ஷல் ஏ.நேசமணி 1968 ஜூன் 1-ஆம் தேதி காலமானார். இவர் இறக்கும் வரை இவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இவர் இறப்பையொட்டி 1969-இல் நடந்த இடைத்தேர்தலில் தான், அதற்கு முன்பு 1967-இல் தன் சொந்த தொகுதியான விருதுநகரில் தோற்கடிக்கப்பட்ட கர்மவீரர் காமராஜ் இங்கு போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய முயற்சியால் மாத்தாண்டத்தில் நேசமணி நினைவு கிருஸ்தவ கல்லூரி தொடங்கப்பட்டது. இப்புவியில் வாழ்வாங்கு வாழ்ந்து புகழோடு மறைந்த மார்ஷல் ஏ.நேசமணி அவர்களின் புகழ் வாழ்க!


Tuesday, August 9, 2011

ஆகஸ்ட் 6 தேசத்துக்கான உபவாச ஜெப தினமாக டெக்சாஸ் கவர்னர் பிரகடனம்



அமெரிக்காவின் தெற்கிலுள்ள ஒரு மாகாணம் டெக்சாஸ். இம்மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் ரிக் பெர்ரி (Rick Perry) கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்ற விரும்பும் ஒரு நல்ல கிறிஸ்தவர். இவர் சமீபத்தில் ஆகஸ்டு 6-ம் தினத்தில் தேசத்துக்காக உபவாசம் இருந்து ஜெபிக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இவர் தன் அறிக்கையில் கூறும் போது, “தேசம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அத்தேசத்தின் அதிகாரிகள் தேவனிடத்தில் தங்களை தாழ்த்தி ஒப்புக்கொடுத்து தேசத்தை நல்ல திசையில் நடத்த ஞானத்தையும் தேவ இரக்கத்தையும் பெற்றுக் கொள்ளவேண்டும். யோவேல் 2-ம் அதிகாரம் 15,16ம் வசனங்கள் போல நான் தேவனிடத்தில் விண்ணப்பிக்கவும் உபவாசிக்கவும் நான் உங்களை அழைக்கிறேன். அந்த வசனங்கள் இப்படியாக சொல்கிறது,சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். ஜனத்தைக் கூட்டுங்கள், என்கிறது. இயேசு யோவான் 11:41-42-ல் எல்லாருக்காகவும் பொதுவெளியில் விண்ணப்பித்தது போல நாமும் நம் விசுவாசத்தை வெளிப்படுத்தவேண்டும்” எனக்கூறி ”A Day of Prayer and Fasting for Our Nation” -க்கு அறைகூவல் விடுத்துள்ளார். அமெரிக்க மாகாண கவர்னர் ஒருவரே தைரியமாக இதனை பிரகடனம் செய்ததை காணச் சகிக்காத சில குழுவினர் பிசாசினால் ஏவப்பட்டு இதனை தடைசெய்ய முழு முயற்சிமேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஜெப கூடுகைக்கு வரும் ஆதரவை விட எதிர்ப்புகளே அதிகம்.Federal Lawsuit-களும் போய் கொண்டிருக்கின்றன. கூடவே ஏகப்பட்ட பரிகாசங்களும் நிந்தனைகளும். யெகோவா யீரே- வெற்றி தரும் கர்த்தர் இந்த தடைகளை இழி சொற்களையெல்லாம் கடந்து அந்த உபவாச ஜெபம் மாபெரும் வெற்றி பெறவும், அதன் மூலம் சாத்தானின் கோட்டைகள் முற்றிலுமாக தகர்க்கப்படவும் நீங்களெல்லாரும் ஜெபிக்க நாம் வேண்டிக்கொள்கிறோம்.

யாத்திராகமம் 15:1 கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
II கொரிந்தியர் 2:14 கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

http://governor.state.tx.us/news/proclamation/16247/




http://www.thewayofsalvation.org/2011/08/6.html

Friday, July 8, 2011

எதை நாடுகிறோம்?

எதை நாடுகிறோம்? 
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். -  (மத்தேயு 6:33).

 


நம் ஒவ்வொருவருடைய விருப்பங்களும் நமது வயதுக்கும், நாம் இருக்கும் நிலவரத்திற்கும் தக்கதாக வேறுபடுகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள நல்ல மதிப்பெண்கள் பெற்று தங்களுக்கு நல்ல வேலையை பெற்று தரக்கூடிய தொழிற்கல்வி கற்க்க விரும்புகின்றனர். படித்து முடித்தவர்கள் அதிக வருமானத்தை தரக்கூடிய நல்ல வேலையில் சேர பிரும்புகின்றனர். நல்ல வேலையில் சேர்ந்தவர்கள் வெளிநாடு சென்று அதிக பணம் சம்பதிக்க விரும்புவர். இப்படி நல்ல வேலை, நல்ல வாழ்க்கை துணை, நல்ல வீடு என்று நம்முடைய விருப்பங்கள் விரிந்து கொண்டே போகின்றன. 'எனக்கு' இவையெல்லாம் வேண்டும் என்று இன்னும் பல விருப்பங்கள் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் உண்டு.

 

ஆனால் 'என்னில்' இவையெல்லாம் வேண்டுமென்று நாம் எவற்றை எல்லாம் விரும்புகிறோம்? தாவீது கொல்கிறார், 'தேவனே சுத்த இருதயத்தை 'என்னிலே' சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். ஈசோப்பினால் என்னை சுத்திகரியும்' என்று தாவீது தன்னிலே பெற்று கொள்ள வேண்டியவற்றிற்காக ஜெபிக்கிறார். ஆனால் அவர் பாவத்தில் விழுந்து விட்டபின்பே இந்த ஜெபத்தை ஏறெடுத்தார். நாம் பாவத்தில் விழுந்து விடாதபடிக்கு அனுதினமும் காலையில் எழுந்தவுடன் இந்த ஜெபத்தை ஏறெடுக்க பழகி கொண்டால்  நம்மை பாவத்தில் விழாதபடி தேவன் காத்து கொள்வார்.

 

நம்முடைய ஜெபத்திலே அதிக பாரத்தையும், நேரத்தையும் எடுப்பது 'எனக்காகவா' அல்லது 'என்னிலே' மாற்றம் கொண்டு வாரும் என்று ஜெபிப்பதற்காகவா? என் கடன் பாரம் தீர வேண்டும், என் வீடு கட்டி முடிக்க உதவும், என் பிள்ளை நன்றாக படிக்க வேண்டும், என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், எனக்கு நல்ல துணை கிடைக்க வேண்டும் என்பது தானே நம் ஜெபத்தில் அதிகம்! ஆனால் தாவீதை போல தேவனே என்னில் மாற்றம் தாரும் என ஜெபிப்பவர்கள் வெகு சிலரே. என்னில் தாழ்மையை தாரும், பொறுமையாயிருக்க செய்யும், அன்பு நிறைந்த உள்ளத்தை என்னிலே சிருஷ்டியும் என நமக்குள் ஏற்பட வேண்டிய மாற்றத்திற்காக நாம் அதிகமாக ஜெபிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நமது ஒவ்வொரு அவயவங்களையும் கர்த்தருடைய பலிபீடத்தில் வைத்து அவர் நம்மை பரிசுத்தப்படுத்தும்படி மன்றாடுவோம். அந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் ஆண்டவரின் நினைவாய் இருக்க ஜெபிப்போம். நம் வாயின் வார்த்தைகளெல்லாம் பிறர் காயம் ஆற்ற கூடியதாக இருக்க ஜெபிப்போம்.

 

பிரியமானவர்களே, அன்று சாலொமோன் ராஜா இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த ஞானமுள்ள இருதயத்தை மட்டும்தான் கேட்டான். ஆனால், தேவன் அவன் கேளாத மற்ற எல்லா ஐசுவரியங்களையும் அவனுக்கு கொடுக்கவில்லையா? அதுபோல நமது எண்ணமும் 'எனக்கு எனக்கு' என்றிராதபடி 'என்னிலே' என்று ஜெபிக்கிறவர்களாய் மாறுவோம். சுத்திகரிக்கப்பட்ட பாத்திரத்திலே எவரும் பாலை ஊற்றுவார்கள். இல்லாவிட்டால் பாத்திரத்திலுள்ள அசுத்தம் பாலை கெடுத்து விடும். அதுபோல நம்மை சுத்தமாக காத்து கொள்வோமானால், நமக்கு வேண்டிய ஆசீர்வாதங்கள் தானாய் வந்து நம் வாழ்வை நிரப்பும். நமது சரீரத்திற்காக அல்ல, ஆத்துமாவிற்காக கவலைப்படுவோம். சரீரத்தின் தேவைகளை தேவன் பார்த்து கொள்வார். ஆமென் அல்லேலூயா!

 

என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆண்டவர்க்கே சொந்தம்

இனி வாழ்வது நானல்ல

என்னில் இயேசு வாழ்கின்றார்

..

கர்த்தாவே உம் கரத்தில்

நான் களிமண் போலானேன்

உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்

என்னை எந்நாளும் நடத்திடும்

  


ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் எங்கள் சரீர தேவைகளுக்காக மாத்திரம் ஜெபிக்கிறவர்களாக இல்லாதபடி, எங்கள் ஆத்தும ஈடேறும்படியாக ஜெபிக்கிறவர்களாக எங்களை மாற்றும். எங்கள் உள்ளான மனிதன் பெலப்படும்படியாக, ஆவியின் கனி எங்களில் காணப்படும்படியாக நாங்கள் எங்கள் ஆத்துமாவை ஒவ்வொரு நாளும் உம்முடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறவர்களாக எங்களை மாற்றும். முதலாவது தேவனுடைய ராஜயத்தை தேடுங்கள், மற்றவை கூட கொடுக்கப்படும் என்றீரே, முதலாவது உமது ராஜ்யத்திற்கடுத்தவைகளை தேட கிருபை தருவீராக. அதினால் சரீர தேவைகளை பெற்று கொள்ள கிருபை செய்வீராக.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


http://www.anudhinamanna.net/

Saturday, April 30, 2011

தேவனே நமக்கு கேடகமானவர்


தேவனே நமக்கு கேடகமானவர் 
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார். - (சஙகீதம் 144:2).

 
1962-ம் வருடம் பிப்ரவரி மாதம் 20ம் தேதி சரியாக காலை 9:47 மணியளவில் விண்வெளி ஊர்தி கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் நடுவில் புகையை கக்கி கொண்டு, ஜான் கிலன் (John Glenn)  என்ற விண்வெளி ஆராய்ச்சியாளரை ஏந்தி கொண்டு கிளம்பியது. அந்த ஊர்தியில் அவர் மட்டும் தனித்து பயணம் செய்தார்.

 

அந்த விண்வெளிகலம்  பூமியை மூன்று முறை சுற்றி, நான்கு மணி நேரத்தில் 80,000 மைல்களை கடந்து வந்து படங்களை எடுத்துவிட்டு, பூமிக்கு திரும்ப ஆரம்பித்தது. அந்த ஊர்தி கீழே வந்து கொண்டிருந்தபோது, அதை கன்ட்ரோல் செய்து கொண்டிருந்த ஹுஸ்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அந்த ஊர்தியிலிருந்து கிடைத்தது. அதன்படி, அந்த ஊர்தியில் இருந்த அக்கினி கேடகம் அதை விட்டு தனியே கழன்றுகொண்டு இருக்கிறது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்படி அது கழன்று வந்தால், முழு ஊர்தியும் எரிந்து போய் விடும். அதிலிருந்த ஜானும் எரிந்து போய் விடுவார்.

 

இதை விண்வெளியிலிருந்து சரி செய்ய இப்போது முடியாது. ஆனால் அந்த கலம் பூமியை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என்று விஞ்ஞானிகள் யோசித்து கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென்று அந்த விண்வெளிகலத்திற்கும் கீழே அதை இயக்கி கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையில் தொடர்பு அற்று போனது. அதை Black Hole என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எந்தவித தொடர்பும் என்ன நடக்கிறது என்று அறியாமலும் இருக்கும்போது இந்த நிலைமை ஏற்படும்.

 

நிமிடங்கள் வேகமாக கடந்து சென்று கொண்டிருந்தது. நாசா விஞ்ஞானிகள் இயக்குகிற அறையிலிருந்து என்ன செய்வது என்று தவித்து கொண்டிருந்தனர்.  ஐந்து நிமிடங்கள் கழித்து, ஜானின் குரல் அவர்களுடைய ரேடியோவில் கேட்டது 'இது ஜான்' என்று. ஜான் பூமியை நோக்கி பத்திரமாக வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்களின் மத்தியில் ஏற்பட்ட சந்தோஷம் அளவில்லாதது!

 

பின்னர் தான் தெரிந்தது, அது தவறான ஒரு சிக்னல் என்று! ஜான் பத்திரமாக வந்து தரையிறங்கினார். அவர் அந்த Black Hole லில் இருந்த அந்த நிமிடங்கள் மிகவும் அதிர வைக்கத்தக்கதாக இருந்தது.

 

வேதத்தில் யோசேப்பும் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தார். அவருடைய சகோதரர்கள் அவரை தூக்கி ஒரு குழிக்குள் போட்டு விட்டார்கள். யாருடனும் அவருக்கு தொடாபில்லாமல் போய் விட்டது. அவர் போட்ட சத்தங்கள் யார் காதிலும் கேட்கவில்லை. பின்னர் அவரை முன்பின் தெரியாத வியாபாரிகளிடம் விற்று போட்டார்கள். அவர் அநேக பாடுகளினூடே சென்றார். ஆனால் ஒரு நாள் வந்தது. கர்த்தர் அவரை எல்லாருக்கும் மேலாக உயர்த்தினார். யோசேப்பு எதிர்பாராத உயர்வு அவருடைய வாழ்க்கையில் வந்தது.

 

ஒருவேளை நீங்களும் Black Hole என்று சொல்லப்படும் கடும் பாடுகளுக்கு நடுவில் சென்று கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் படும் பாடுகளை அறிவார் யாரும் இல்லையோ? நீங்கள் கூப்பிடும் சத்தம் கர்த்தருக்கும் கேட்கவில்லை என்று நினைக்கிறீர்களோ? உங்கள் வாழ்க்கை உங்களையும் மீறி போய் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களோ? தேவன் என்னை கைவிட்டார் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்களோ? Black Hole அனுபவம் உங்களை தனிமையாக்கிற்றோ?

 

நம்முடைய தனிமை மற்றும் துன்பமான நேரங்களில் நம்மை விட்டு தேவன் தூர போனார் என்று நாம் நினைத்தாலும், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை என்று சொன்ன தேவன் நம்மை விட்டு விலகாமல் நம் கூடவேதான் இருக்கிறார். நம்மை காக்கும் கேடகமாக நம்மை சுற்றிலும் இருக்கிறார். உங்களுக்கு ஏற்படும் அக்கினி போன்ற சோதனைகளிலும் உங்களை சுற்றி கேடகமாக அவர் உங்களை காத்து கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் அவரோடு இன்னும் ஆழமான உறவு வைத்து கொள்ள அவர் உங்களுக்கு இந்த பிரச்சனைகளை அனுமதித்திருக்கலாம். அவரையே பற்றி கொள்ளுங்கள். நீங்கள் கர்த்தருடைய பிள்ளையாயிருந்தால், ஒன்றை ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை விட்டு விலகுவதேயில்லை என்று. யோபுக்கு அநேக துன்பங்கள் வந்தது, பிரச்சனைகள் வந்தது, ஆனால் ஒரு நாள் வந்தது, பிரச்சனைகள் மாறிப்போனது. இரட்டிப்பான நன்மைகள் யோபுவை வந்தடைந்தது. உங்கள் கண்ணீரையும், புலம்பலையும் காண்கின்ற தேவன் ஒருவர் உண்டு. அதற்கு பதில் கொடுக்கிறவரும் அவரே. அவரை பற்றி கொள்ளுங்கள். அவர் உங்களை மறப்பதில்லை! அவரே நமக்கு கேடகமும் நம்மை விடுவிக்கிறவருமானவர். ஆமென் அல்லேலூயா!

 

பயப்படாதே வலக்கரத்தாலே

பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்

பாசம் என்மேல் நீர் வைத்ததினால்

பறிக்க இயலாதெவருமென்னை

..

உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்

தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்

அக்கினியின் மதிலாக

அன்பரே என்னைக் காத்திடுமே

 

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்களுக்கு கேடகமாக, அக்கினியின் மதிலாக எங்களை பாதுகாக்கிற உமது தயவிற்காக உமக்கு நன்றி. எங்களுக்கு வரும் பிரச்சனைகளினால் எல்லாரும் எங்களை கைவிட்டார்கள், என் தேவன் கூட என்னை மறந்தார் என்று நினைக்கும் நேரங்களிலும் நீர் எங்களுடனே எப்போதும் கூடவே இருக்கிற தேவன் என்பதை நினைத்து உம்மை சார்ந்து ஜீவிக்க எங்களுக்கு பெலனை தருவீராக. பிரச்சனைகளை மாற்றுவீராக. யோபை போலவும், யோசேப்பை போலவும் உயர்த்துவீராக.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு


எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, சகோதரி சாந்தகுமாரியின் மாணவர் சதிஷ்குமார் விபத்தில் சிக்கி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளும் அவருக்கு எடுத்து கொள்ளும் சிகிச்சைகள் நல்ல பலன் கொடுக்க ஜெபிக்கிறோம்.  நடந்து கொண்டிருக்கும் யுனிவர்சிட்டி பரிட்சைகளில் கலந்து கொள்ளும்படியாக கிருபை செய்யும். அவருடைய சகோதரனும் சென்னையில் அப்பொல்லோ ஆஸ்பத்திரியில் இருப்பதால் அவருக்கும் பரிபூரண சுகத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம்.

.

சகோதரன் தேவநேசன் கொடுத்திருக்கிற ஜெப விண்ணப்பத்தையும் உம்முடைய சமுகத்தில் வைக்கிறோம். கிரேஸி, அன்பு, ஜார்ஜ் என்னும் மூன்று சகோதர சகோதரிகளுக்கும் வயதாகி கொண்டே போகிறபடியால் அவர்களுடைய திருமண காரியங்கள் சீக்கிரமாய் அமையத்தக்கதாக தேவன் கிருபை செய்வீராக.  கர்த்தர் இரங்கி கிருபை செய்வீராக. ஜெபங்களுக்கு பதிலை தருவீராக. உமக்கே எங்கள் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்து கிறிஸ்துவின் இனிய நாமத்தில் எங்கள் ஜெபங்ளை ஏறெடுக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள தகப்பனே ஆமென்.





http://www.anudhinamanna.net/

Thursday, January 13, 2011

தேவனுக்கு துரோகம் செய்யும் கிறிஸ்தவ ஊழியக்காரர்

 
 http://www.yourmaxliving.com/wordpress/wp-content/uploads/DisappointedMan1.jpg

''நீங்களோ, சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவ தூதர்களிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேரானவர்களின் சர்வ சங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலின் இரத்தம் பேசினதைப் பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்'' (எபிரேயர் 12 : 22-24)

மேலே தேவனுடைய வசனத்தில் காணப்பட்ட மகா மகத்துவமும், உன்னதமுமான நிலைக்கு வந்து சேர்ந்த கர்த்தருடைய ஊழியக்காரர் பலர் அந்த உன்னத நிலையை உதறித் தள்ளிவிட்டு இன்று உலகம் கொடுக்கக் கூடிய அநித்தியமானஆஸ்தி, ஐசுவரியம், செல்வம், பெயர், புகழ், சொகுசு வாழ்க்கை மற்றும் உலக மேன்மையை நாடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மக்களுடைய ஒரே குறிக்கோளெல்லாம் இந்த உலகத்தில் கோடிகளைக் குவிப்பதுதான். இந்த ஊழியக்காரர் இன்று உலக மக்களின் பார்வையில் ''இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள்'' (அப் 16 : 17) என்ற ஸ்தானத்தில் இல்லாமல் உலக கோடீஸ்வரர்களின் வரிசையில் வைத்து அடையாளம் காணப்படுகின்றனர். ஒரு சமயம் ஒரு இந்து வாலிபன் என்னைப் பார்த்து ''உங்கள் தேவ ஊழியர்கள் பில் கேட்ஸ் (உலகின் முதன்மை ஸ்தானத்திலுள்ள மிகப் பெரிய ஐசுவரியவான்) போன்ற கோடீஸ்வரர்களின் கோடிகளுக்கு வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்'' என்று என்னிடம் கூறினான். எத்தனை வேதனையான காரியம்!

''உலகம் என் பின்னே, சிலுவை என் முன்னே, பின் நோக்கேன் நான்'' என்ற முழுமையான அர்ப்பணிப்போடு தேவனுக்கு ஊழியம் செய்ய களம் இறங்கிய தேவஊழியன் உலக மாயை என்ற சிவப்பான பயற்றங்கூழை (ஆதி 25 : 32) கண்டதும் தனது உன்னதமான அழைப்பை அசட்டை செய்து காற்றில் பறக்கவிட்டு விட்டு ''பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும், ஒலிவத் தோப்புகளையும் திராட்சத் தோட்டங்களையும், ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் திரும்பிவிட்டான்'' (2 இரா 5 : 26) ''நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல'' (யோவான் 17 : 16) என்று ஆண்டவர் தமது அடியார்களைக் குறித்து எத்தனை அருமை பெருமையாக தமது பிதாவிடம் கூறினார். ஆனால், இன்று தேவ ஊழியன் முதல்தரமான உலகத்தானாக, உலக மனிதன் அனுபவிப்பதைக் காட்டிலும் உலகத்தை அத்தனை அதிகமாகவும், முழுமையாகவும் ருசித்துப் புசித்து ஆனந்தித்து வருகின்றான். தேவ ஊழியனுக்கு எத்தனை ஆடம்பரமான வாழ்க்கை வசதிகள், எத்தனை ஆடம்பரமான பிரயாணங்கள், உலக ஐசுவரியவான்கள், ஆளுகையில் உள்ள உயர்மட்ட உலக அரசியல்வாதிகள் போன்றவர்களோடு இவர்களுடைய நெருக்கமான ஐக்கிய சிநேகங்கள், சமுதாயத்தில் மினுக்கான வஸ்திரம் தரித்திருப்போருக்கு இவர்கள் கொடுக்கும் முதலிடங்கள், இவர்கள் வாயிலிருந்து புறப்படும் பெருமையான வார்த்தைகள், இவர்கள் பார்க்கும் மேட்டிமையான பார்வைகள். யார் இவர்களை தேவ ஊழியராக அடையாளம் காண முடியும்?

இவர்கள் பிரசங்கிக்கும் ஆண்டவர் பரம ஏழையாக இருந்து இந்த உலகத்தைக் கடந்து சென்றார். அவர் சிசுவாக இருந்தபோது அவருடைய பெற்றோர் அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க எருசலேம் தேவாலயத்திற்குக் கொண்டு சென்றபோது ஒரு சிறிய ஆட்டுக்குட்டியை வாங்கி பலி செலுத்த பண வசதி இல்லாத அத்தனை ஏழ்மை நிலையில் ஒரு ஜோடு காட்டுப் புறாவையாவது இரண்டு புறாக் குஞ்சுகளையாவது பலியாக செலுத்தியதாக நாம் காண்கின்றோம். தம்முடைய அடியார்களை ஊழியங்களுக்கு அனுப்பிய சமயத்தில் ''பணப்பை, சாமான்பை, பாதரட்சைகள் இல்லாமல்'' அனுப்பிய (லூக்கா 22 : 35) அத்தனையான தரித்திர நிலை. வரிப்பணம் செலுத்தக்கூட கையில் பணம் இல்லாமல் அன்பின் ஆண்டவர் பேதுருவினிடத்தில் கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்து அதன் வாயைத் திறந்து பார்த்து அங்கிருக்கும் பணத்தைக் கொண்டு தனக்கு வரி செலுத்தும்படியாக கூறுகின்றார். ''நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு, மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை'' (மத் 8 : 20) என்ற வசனத்திலிருந்து அவர் எத்தனை ஏழையாக உலகத்தில் வாழ்ந்தார் என்று நாம் பார்க்கின்றோம். ஏசாயா 53 ஆம் அதிகாரம் 9 ஆம் வசனத்தில் நாம் பார்க்கும்போது ''ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்'' என்ற வசனத்திலிருந்து அவர் தமது பூவுலக நாட்கள் முழுமையிலும் தரித்திரனாக வாழ்ந்ததாகவும் மரித்த போதுதான் ஐசுவரியவானோடு அவர் இருந்ததாகவும் நாம் கவனிக்க முடியும்.

ஆண்டவருடைய அன்பின் அடியார்கள் அனைவரும் தங்கள் போதகரைப் போல இந்த உலகத்தில் தரித்திரராக வாழ்ந்து கடந்து சென்றார்கள். ''வெள்ளியும், பொன்னும் என்னிடத்தில் இல்லை'' (அப் 3 : 6) என்று அலங்கார வாசலண்டை அமர்ந்திருந்த பிச்சைக் காரனிடத்தில் பேதுரு அப்போஸ்தலன் சொல்லுவதை நாம் பார்க்கின்றோம். ''தரித்திரர்கள்'' ''ஒன்றுமில்லாதவர்கள்'' என்று அவர்கள் அறியப்பட்டிருந்தார்கள் என்பதை தேவனுடைய வார்த்தையில் நாம் வாசிக்கின்றோம் (2 கொரி 6 : 10) ''இந்நேரம் வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாக இருக்கின்றோம்'' (1 கொரி 4 : 11) என்ற தேவ வார்த்தை அப்போஸ்தலர்களின் மிகவும் நிர்ப்பந்தமான ஏழ்மை நிலையை நமக்குத் தெளிவாகக் காண்பிப்பதாக இருக்கின்றது.

ஆனால் இன்றைய தேவ ஊழியர்களின் நிலை முற்றும் நேர்மாறானது. உலகம் அவர்களை கோடீஸ்வரர்களாக மாத்திரமல்ல ''கிறிஸ்தவ வியாபாரிகள்'' ''தொழிலதிபர்கள்'' என்றும் அடையாளம் கண்டு கொண்டிருக்கின்றது. மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும், மறு பிறப்பையும், மனிதனை நினையாமல் சடுதியாக சந்திக்கும் மரணத்தையும், தேவனுடைய நியாயத் தீர்ப்பையும், எரி நரகத்தையும், நித்திய ஜீவனையும், பரிசுத்தத்தையும், இயேசுவைப்போல மாற வேண்டியதன் அத்தியந்த அவசியத்தையும், முடிவில்லாத நித்தியத்தையும் தேவ ஜனத்திற்கு பிரசங்கிக்க வேண்டிய ஊழியக்காரன் நிலையில்லா சரீர சுகத்தையும், 100 ஆண்டு காலம் நோய் நொடியின்றி வாழும் வகையையும், இந்த உலகத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும் இரகசியத்தையும் மக்களுக்குப் பிரசங்கிக்கின்றான். இந்தச் செழுமையின் உபதேசத்தை (ஞசடிளயீநசவைல ழுடிளயீநட டிக ழநயடவா யனே றநயடவா) கடந்த கால பரிசுத்த பக்த சிரோன்மணிகள் தங்கள் கரங்களினால் தொடக்கூட அஞ்சி நடுங்கினார்கள். மருத்துவ மனையில் மிகவும் சுகயீனமாக படுத்திருந்த தங்கள் பையனுக்காக ஜெபிக்க வரும்படியாக மிகவும் வருந்தி அழைத்த ஒரு அன்பான பெற்றோருடைய வேண்டுகோளைக்கூட பரிசுத்த பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங் அவர்கள் மிகவும் நடுக்கத்தோடும், தயக்கத்தோடும் ஏற்றுக் கொண்டதுடன், இனி தன்னை அப்படிப்பட்ட காரியங்களுக்கு திட்டமாக அழைக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டதாகவும் நாம் வாசிக்கின்றோம். காரணம், சரீர சுகத்தை நாம் பிரசங்கித்தால் அவர்களின் விலையேறப்பெற்ற ஆத்துமாவின் இரட்சிப்பைக் குறித்த காரியத்தில் மக்கள் கவனமும், கவலையும், முக்கியத்துவமும் கொடுக்கத் தவறிவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சினார்கள்.

இந்த உலகத்தைக் கடந்து சென்ற பூர்வ காலத்து பரிசுத்த பக்தர்களின் வாழ்க்கை வரலாறுகளை நீங்கள் உங்கள் கரங்களால் எடுத்துப் படித்துப் பாருங்கள். ஆ, அவர்கள் எல்லாரும் நஷ்டப்பட்ட பாவிகள் சென்றடையப்போகும் முடிவில்லாத நித்திய எரி நரகத்தைக் குறித்தே பிரசங்கித்தார்கள். எந்த ஒரு நிலையிலும் மக்கள் அந்த தேவ கோபாக்கினையின் தீச்சூழைக்குச் செல்லாமல் விழிப்போடு தங்களைக் காத்துக் கொள்ள கண்ணீரோடும், அழுகையோடும் தேவ ஜனத்தை மன்றாடி எச்சரித்தார்கள். 18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த ராட்சத தேவ பக்தரான யோனத்தான் எட்வர்ட்ஸ் என்பவர் ''கோபமுள்ள தேவனுடைய கரத்தில் பாவிகள்'' (ளுinநேசள in வாந hயனேள டிக யn யபேசல ழுடின) என்ற தமது பிரசங்கத்தை உபாகமம் 32 : 35 ஆம் தேவ வசனத்தின் பேரில் தாட்களில் எழுதி மங்கலான மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தமக்கு முன்பாக அமர்ந்திருந்த மக்களுக்கு வாசித்தார். உடன்தானே, எழுப்புதலின் தீ பற்றி எரிந்தது. மக்கள் தேவாலயத்தின் தூண்களை கட்டிப்பிடித்தவர்களாக தங்கள் கால்கள் இப்பொழுதே நரக அக்கினிக்குள் இருப்பதாகக் கூறி கதறி அழுதார்கள். நரக அக்கினியிலிருந்து தாங்கள் காக்கப்படும் பொருட்டாக தேவனுடைய இரக்கத்துக்காகவும், பாவ மன்னிப்புக்காகவும் அவர்கள் கெஞ்சி கதறினார்கள்.

பரிசுத்த பக்தன் ஹட்சன் டெயிலருடன் சேர்ந்து மிஷனரியாக சீனா தேசத்திற்குச் சென்ற மற்றொரு பெரிய தேவ மனிதர் வில்லியம் சால்மர்ஸ் என்பவர் சிறுவனாக இருந்தபோதே தெருக்களில் மக்கள் நடந்து செல்லுவதைக் காண்கையில் அவர்களின் கால்கள் எரி நரகத்துக்கு நேராகச் சென்று கொண்டிருக்கின்றதே என்று அழுது கண்ணீர் சிந்தினதாக அவரைக் குறித்து எழுதப்பட்டிருக்கும் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

மேல் நாட்டுப் பரிசுத்த பக்தர்களின் காரியங்கள் அப்படியிருக்க தமிழ் நாட்டின் ஒரு பிரபலமான தேவ ஊழியரை ஒரு சமயம் மக்கள் அணுகி ''தேவனுடைய அன்பை மட்டும் மக்களுக்குப் பிரசங்கிக்காமல், மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு, தேவனுடைய நியாயத்தீர்ப்பு, நித்திய எரி நரகம், நித்திய ஜீவன் போன்ற காரியங்களையும் தன்னுடைய பிரசங்கத்தில் குறிப்பிடும்படியாகக் கேட்டுக்கொண்டபோது , அந்த மக்களிடம் அவர் ''தேவனுடைய அன்பைப் பற்றிச் சொல்லவே தனது வாழ்நாட் காலம் போதாது என்றும் மற்ற காரியங்களைக் குறித்துப் பேச தனக்கு காலம் இல்லை'' என்றும் சொன்னதாக நான் கேள்விப்பட்டேன். உண்மைதான், மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு, மரணம், தேவனுடைய நியாயத்தீர்ப்பு போன்றவற்றைப் பேசினால் மக்கள் அதை ஒருக்காலும் விரும்பவேமாட்டார்கள் என்றும், அந்தச் செய்திகளுக்கு மக்கள் கூட்டம் நிச்சயமாக வரவே வராது என்றும் தங்களுக்குக் காணிக்கைகள் கட்டாயம் கிடையாது என்றும் அவர்களுக்கு நன்கு தெரியும்.

அதுமட்டுமல்ல, மேய்ப்பனாயிராதவனுக்கு ஆடுகள் மேல் கவலையும், அக்கறையும், அன்பும் எங்கிருந்து வரும்? அவனுக்கு வேண்டியதெல்லாம் மந்தையைக் கொண்டு கூலி மாத்திரமே. எப்படியோ தங்களுக்கு காணிக்கை கிடைத்தால் போதுமானது. மந்தை நித்திய அக்கினிக்குச் சென்றால் என்ன? அல்லது அது எரி நரகத்துக்குச் சென்று அக்கினியும், கந்தகமும் கலந்து எரியும் எரி மலைக் குழம்பான அக்கினி கடலில் யுகாயுகமாக துடிதுடித்து வெந்து கொண்டிருந்தால் என்ன? தேவ மைந்தன் தனது மானிடாவதார காலம் முழுமையிலும் எரி நரகத்துக்குச் செல்லும் தமது ஆடுகளுக்காக கண்ணீரையே வடித்துக் கொண்டிருந்தாரே (லூக்கா 19 : 41) ஆடுகளையும் தங்கள் ஆத்துமாக்களுக்காக அழுது நரக அக்கினிக்கு தப்பிக்கொள்ள கேட்டுக் கொண்டாரே (லூக்கா 23 : 28) தேவ மைந்தன் தனது வாழ்வில் சிரித்ததை யாருமே பார்க்கவில்லை என்றும் அவர் அழுததையே பலரும் பல சந்தர்ப்பங்களிலும் பார்த்ததாக ஒரு ரோமன் எழுதியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஒரு தேவ ஊழியர் சமீபத்தில் கர்த்தருடைய செய்தியை கொடுப்பதற்காக ஒரு சபைக்குச் சென்றதாகவும், அந்த சபையின் பாஸ்டர் அந்தப் பிரசங்கியாரைப் பார்த்து ''எனது சபை மக்கள் வாரம் முழுவதும் பாடுபட்டு உழைத்து களைத்து சோர்ந்து போய் உற்சாகமான ஒரு பிரசங்கத்தை வாரக் கடைசியில் கேட்க எதிர்நோக்கி இங்கு வந்து கூடியிருக்கின்றார்கள். எந்த ஒரு நிலையிலும் பாவம், மனந்திரும்புதல், மரணம், நியாயத் தீர்ப்பு, நரகம் போன்ற எதைக் குறித்தும் நீங்கள் அவர்களுக்குப் பேசாமல் மக்கள் சிரித்து மகிழும்படியான ஒரு உற்சாகமான பிரசங்கத்தை மட்டும் செய்துவிட்டுச் செல்லுங்கள்'' என்று கூறினதாக அந்த தேவ ஊழியர் மிகவும் வேதனையுடன் என்னிடம் சொன்னார்கள். இதில் நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மக்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல் செவித்தினவுள்ளவர்களாகி தங்கள் சுய இச்சைக்கேற்ற போதகர்களை தங்களுக்கு திரளாகச் சேர்த்துக் கொண்டு சத்தியத்தை விட்டு விலகி கட்டுக் கதைகளுக்கு சாய்ந்து போவார்கள் என்பதை பரிசுத்த ஆவியானவர் முதலாம் நூற்றாண்டிலேயே நமக்கு தெரிவித்துவிட்டார் (2 தீமோ 4 : 3 - 4) அதுமட்டுமல்ல, தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க மனதில்லாத மக்கள் பொய்யை விசுவாசித்து அழிந்து போகும்படியாக கொடிய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார் என்ற பயங்கர வார்த்தையும் கர்த்தருடைய வசனத்தில் உண்டு (2 தெசலோ 2 : 10 - 12) அந்தக் காட்சியைக் காணத்தான் இன்று பெருங்கூட்டம் மக்கள் ஆசீர்வாதப் பிரசங்கிமார்களின் மனதை மயக்கும் வார்த்தைகளைக் கேட்க (தீத்து 1 : 10) அவர்களின் பின்னால் பட்டணங்கள் தோறும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.

தேவ ஊழியர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் பொய்யான வெளிப்பாடுகளையும், பொய்யான தீர்க்கத்தரிசனங்களையும் மக்களுக்குக் கூறி வெகு துரிதமாகவே பெருஞ் செல்வந்தர்களாக மாறிவிடுகின்றனர். ஒரு தேவ ஊழியர் தனது ஊழியத்தை மிகவும் எளிமையாக ஒரு கிறிஸ்தவ கிராமத்தில் ஆரம்பித்தவர், நாளடைவில் ஒரு குறிப்பிட்ட பட்டணத்திலுள்ள ஐசுவரியமுள்ள கிறிஸ்தவ வியாபாரிகள் பலரிடம் போக்குவரத்துமாக இருந்து அவர்களுக்கு தீர்க்கத்தரிசனங்கள், வெளிப்பாடுகளை கூறி சீக்கிரமாகவே பணக்காரனாகி இப்பொழுது தனது சொந்த ஊரில் மாடி வீடு கட்டி வீட்டுக்கு முன்பாக சில லட்சங்கள் மதிப்புள்ள ஒரு காரை வாங்கி நிறுத்தி, தனது பணத்தை திருடர்கள் திருடிக் கொண்டு போய்விடாதபடி இருக்க வீட்டுக் காவலுக்குக் கடித்துக் குதறக்கூடிய ஒரு பெரிய அல்சேஷன் நாய் ஒன்றை தனது வீட்டின் பிரதான நுழை வாயிலில் கட்டிப் போட்டிருக்கின்றார் என்று அந்த தேவ ஊழியரின் ஊருக்கு வெகு அருகாமையில் வசிக்கும் ஒரு சகோதரன் சமீபத்தில் என்னிடம் விசனத்துடன் சொன்னார்கள்.

''செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்து குறைவையும், உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள். உலகம் அவர்களுக்குப் பாத்திரமாக இருக்கவில்லை'' (எபிரேயர் 11 : 27 - 28) அன்று தேவ மக்களுக்கு உலகம் பாத்திரமாக இருக்கவில்லை. ஆனால் இன்றுள்ள நிலை வேறு. தேவ ஊழியன் முழு உலகத்தானாக வாழ்ந்து உலகத்தை முழுமையாக ருசித்து ஆனந்திக்கின்றான். தன் ஜீவனை இரட்சிக்க தன் முழு பெலத்தோடும் போராடி உலக வாழ்வில் சவுலைப்போல ஜெயஸ்தம்பம் நாட்டுகின்றான். சுவிசேஷத்தினிமித்தம் ஜீவனை இழந்து போகும்படியாக (மாற்கு 8 : 35) ஆண்டவர் அவர்களுக்கு கட்டளையிட்டார். ஆனால், ஊழியக்காரன் தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை உலகப் பொருளுக்காக பண்டமாற்று செய்து அவனை அழைத்த அன்பின் ஆண்டவர் முகத்தில் உமிழ்ந்து, கரியைப் பூசி அனுப்பி விட்டான்.

இன்று தேவ ஊழியம் முதல்தரமான வியாபாரமாக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் அந்த வியாபாரம் செழித்தோங்கி வளர்ந்து கொண்டிருக்கின்றது. பணம் சம்பாதிக்க மிகவும் சுலபமான வழி, வெகு துரிதமாக ஐசுவரியவானாக உயர்வதற்கு வெகு நிச்சயமான பாதை தேவ ஊழியமாகும். ஆனால் அதைப் போன்ற ஆபத்து வேறு எதுவும் கிடையாது என்று ரிச்சர்ட் பாக்ஸ்டர் என்ற பூர்வ காலத்து பரிசுத்தவான் மக்களை கடும் வன்மையாக எச்சரிக்கின்றார். ''தேவ ஊழியத்தை நீ ஒரு உலகப்பிரகாரமான தொழிலாக உனது கரங்களில் எடுப்பாயானால் நீ தொலைந்தாய்'' என்று அவர் கொதித்தெழுந்து குமுறுகின்றார். ஆனால், அவருடைய தேவ ஆலோசனைகளை எல்லாம் இன்றைய மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.

ஏராளமான கூட்டமும், பெரும் காணிக்கையும் எந்த ஊழியர்கள் கூட்டங்களில் சேருகிறதோ அந்த ஊழியர்களின் நடபடிகளை புதிதாக ஊழிய வியாபாரம் ஆரம்பித்திருக்கும் இளைய தலை முறையினர் அப்படியே காப்பி அடித்து அவர்களைப் போல பிரசங்கித்து, அவர்களைப் போல ஜெபித்து, அவர்களைப்போல சைகைகளைக் காட்டி, அவர்களைப்போல தீர்க்கத்தரிசனம் உரைத்து அவர்களைப் போலவே பிரசங்க மேடைகளில் நடிக்கின்றனர். ஆ, எத்தனை பயங்கரமான காரியம் பாருங்கள். ''கண்ணை உருவாக்கினவர் காணமாட்டார் என்றும் மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியார்'' (சங் 94 : 9, 10) என்றும் இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பொல்லாத ஊழியர்களின் தந்திரங்களிலேயே தேவன் அவர்களைப் பிடிப்பார். தேவன் எப்படிப்பட்டவர் என்பதைக் காலப்போக்கில் இந்த மக்கள் இரத்தக் கண்ணீர் வடித்து கண்டு கொள்ளுவார்கள். கர்த்தர்தான் இந்த மக்களுக்கு இரங்கவேண்டும், இவர்களுடைய கண்களைத் திறக்க வேண்டும்.

கடந்த கால பூர்வீக கர்த்தருடைய பரிசுத்த பக்தர்கள் நஷ்டப்பட்ட ஒரு ஆத்துமா முடிவில்லாத நித்திய காலமாக நரக அக்கினியில் அனுபவிக்கக் கூடிய சொல்லொண்ணா அகோர வேதனைகளை எண்ணி தேவ சமூகத்தில் கண்ணீர்விட்டு கதறி அழுது மக்கள் எப்படியாவது ஆண்டவர் இயேசுவை அண்டிக்கொள்ள வேண்டுமென்று ஜெபித்தார்கள். ''ஸ்காட்லாந்து தேசத்தை எனக்குத் தாரும், அல்லது நான் சாகிறேன்'' என்று ஜாண் நாக்ஸ் என்ற மாபெரும் தேவ பக்தன் தனது நாட்டின் மக்களுக்காக மனதுருகி மன்றாடினார். ஆத்துமாக்களின் மனந்திரும்புதலுக்காக வாரக்கணக்கில் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்து மற்றொரு மாபெரும் தேவ மனிதரான ஜியார்ஜ் விட்ஃபீல்ட் என்பவர் அழுது புரண்டதாக நாம் வாசிக்கின்றோம். இப்படி ஆத்தும பாரத்தோடு தேவ ஊழியர்கள் கர்த்தருக்காக கடந்த காலங்களில் ஊழியம் செய்திருக்க இந்த நாட்களில் பெரும்பாலான தேவ ஊழியர்கள் பணத்தை மட்டுமே தங்கள் குறிக்கோளாக வைத்து கர்த்தருடைய உன்னதமான தேவ ஊழியங்களை முதல் தரமான வியாபாரமாக்கி கர்த்தருக்கு துரோகம் செய்து அவருடைய பரிசுத்த நாமத்தை புறமதஸ்தர் தூஷிக்கும்படியாக வகை செய்து வைத்திருக்கின்றனர்.

''பரலோகத்தில் அதிக மேன்மையும், நிலையுள்ளதுமான சுதந்திரம் தங்களுக்கு உண்டென்று அறிந்து பூர்வத்தில் தங்கள் ஆஸ்திகளை எல்லாம் தேவ மக்கள் சந்தோசமாகக் கொள்ளையிடக் கொடுத்தார்கள்'' (எபி 10 : 34) என்று வேதாகமத்தில் நாம் பார்க்கின்றோம். ஆனால், இன்று தேவ ஊழியன் தந்திரமான தனது சுய ஆதாயத்துக்கான திட்டங்களைப் போட்டு தேவ ஜனத்தை அதிசய அற்புதமாகக் கொள்ளையிடுகின்றான். ''எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும், நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன்'' (லூக்கா 1 : 71) என்ற உன்னத தேவனின் எதிர்பார்ப்பு, பரிசுத்த வாஞ்சை எல்லாம் பணத்தை நாடிய பொல்லாத தேவ ஊழியனால் நொறுங்கித் தகடு பொடியாயிற்று.
      மேலே

தேவ ஜனமே, தேவ ஊழியரே,
ஆண்டவருக்கு துரோகம் செய்யாதீர்கள்

நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கின நமது அன்பின் ஆண்டவரை உங்கள் பரிசுத்தமான வாழ்க்கையின் மூலமாகக் கனம் பண்ணுங்கள். உங்கள் கிறிஸ்தவ வாழ்வில் நீங்கள் இன்னும் மனந்திரும்பி ஆண்டவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் உங்கள் பாவங்களுக்காக மனங்கசந்து அழுது கண்ணீர் சிந்தி மறு பிறப்பின் நிச்சயமான அனுபவத்துக்குள் உடனே வாருங்கள். இந்த பரிசுத்த மாற்றம் இல்லாமல் நீங்கள் ஒருக்காலும் ஆண்டவருடைய பரம ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க முடியாது (யோவான் 3 : 3) (2 கொரி 5 : 17) என்பதை திட்டமாக உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள் (1 பேதுரு 1 : 15) உங்கள் உலகப்பிரகாரமான பணி இடங்களில் துப்புரவுள்ளவர்களாக இருங்கள். பணி செய்யும் காலங்களில் பரிதானம், லஞ்சங்களை வாங்கிக் குவித்து பணி ஓய்வு காலங்களில் அதைக் கொண்டு நிம்மதி, சமாதானத்தோடு வாழலாம் என்று கனவில் கூட நினைத்து விடாதீர்கள். அது உங்களுக்கு சமாதானத்துக்குப் பதிலாக வேதனைகளையும், சாபத்தையும், கொடிய நோய் பிணிகளையும் கொண்டு வரும். வெறும் கஞ்சை மாதத்திரம் குடிக்கும் வறுமையில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை, பரிதானத்துக்கு உங்கள் கரங்களை நீட்டிவிடாதீர்கள். தேசாதிபதிகளும், பிரதானிகளும் தானியேல் தீர்க்கனிடத்தில் எந்த ஒரு முகாந்தரத்தையும், குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதோ அதேவிதமாக தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவர்களாயிருங்கள். தேவன் அருளிய வேத வசனங்களின் வெளிச்சத்தில் நடந்து ஆண்டவருடைய வசனங்களுக்கு கீழ்ப்படிந்து நடவுங்கள். மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக் கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால் தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாக இருந்த பெரேயா பட்டணவாசிகளைப் போல தினந்தோறும் வேதவாக்கியங்களை முழங்கால்களில் நின்று ஆராய்ந்து தியானித்து வாருங்கள். கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். ''இந்த நியாயப் பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக, இதில் எழுதியிருக்கிறவைகளின்படி யெல்லாம் நீ செய்ய கவனமாயிருப்பாயாக, அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய்'' (யோசுவா 1 : 8)

''நீங்களே என் சாட்சிகள்'' (ஏசாயா 44 : 8) என்று நம்மைத் தமக்கு சாட்சிகளாக வைத்த ஆண்டவருக்கு பரிசுத்த அப்போஸ்தலரைப் போல ''நாங்கள் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோம்'' (அப் 5 : 27) என்று குரல் கொடுப்போம். நமது பரிசுத்தமான வாழ்வின் மூலமாக அதை நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களுக்கு உறுதிப்படுத்திக் காண்பிப்போம்.

கர்த்தருக்கு ஊழியம் செய்வோரே, ஆத்தும பாரத்தோடும், கண்ணீரோடும் உங்களைத் தம்முடைய பரிசுத்தமான ஊழியத்திற்குத் தகுதியுள்ளவர்கள், உண்மையுள்ளவர்கள் (1 தீமா 1 : 12) என்று எண்ணி அழைத்த கர்த்தருக்கு உண்மையோடும், உத்தமத்தோடும் ஊழியம் செய்யுங்கள். ''வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும் கர்த்தரைச் சேவித்தேன்'' (அப் 20 : 19) என்ற பரிசுத்த பவுல் அடிகளாரின் வார்த்தைகளே உங்கள் ஊழியத்தின் நிலைக்கால் சட்டமாயிருப்பதாக. மிகுதியான ஜெபம், உபவாசம் உங்கள் ஊழியங்களுக்கு அலங்காரமாயிருப்பதாக. எந்த ஒரு சூழ்நிலையிலும் மனுஷ புகழ்ச்சிக்காக மாம்சத்தின்படி ஊழியம் செய்யாமல், மற்ற தேவ ஊழியர்கள் எப்படி ஊழியஞ் செய்கின்றார்களோ அப்படியே நானும் ஊழியம் செய்வேன், அவர்கள் எப்படி கோடிகளைக் குவிக்கின்றார்களோ அப்படியே நானும் கோடிகளைக் குவிப்பேன் என்று எண்ணி அவர்களைப் பின்பற்றாமல் ''ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்? '' (அப் 9 : 6) என்ற பரிசுத்த பவுல் அப்போஸ்தனைப் போல ஆண்டவர் உங்களுக்காக வைத்திருக்கும் ஊழியத்தை அவரிடம் கேட்டு அடையாளம் கண்டு அதையே செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையும், உங்கள் ஊழியமும் உங்களை தமது இரத்தக் கிரயத்துக்காகக் கொண்ட உங்கள் அருமை இரட்சகர் இயேசுவை கனப்படுத்தி, மகிமைப்படுத்துவதாக இருப்பதாக.

பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும் தேவ ஜனத்தைக் கண்டித்து உணர்த்துங்கள். உங்கள் ஆண்டவரும், போதகருமாகிய கர்த்தரைப் போல உங்களுடைய பிரசங்கங்களில் எல்லாம் எரி நரகத்தைப் பிரசங்கியுங்கள். நித்திய எரி நரகத்துக்குச் செல்லும் ஆத்துமாக்களை எப்படியாவது தேவன் கிருபையாகச் சந்திக்கும்படியாக உபவாசித்து ஜெபியுங்கள். ஆத்தும பாரத்தோடும், வியாகுலப் புலம்பலோடும் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். ''தினந்தோறும் சில லட்சம் பேர் ஒருபோதும் வெளியேற முடியாத நித்திய நரக அக்கினியில் விழுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நீ அழாதிருப்பாயானால் உன் மனச்சாட்சி எப்பேர்ப்பட்டது?'' என்று ஒரு தேவ பக்தன் நம்மைப் பார்த்துக் கேட்கின்றார். உங்களுடைய உண்மையும், உத்தமமுமான தேவ ஊழியத்தின் மூலமாக கர்த்தருடைய பரிசுத்தமுள்ள நாமம் மகிமைப்படட்டும். ''இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள்'' (அப் 16 : 17) என்று மக்கள் நம்மை அடையாளம் கண்டு கொள்ளட்டும். ''லித்தாவிலும், சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் பேதுருவைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்'' (அப் 9 : 35) என்ற தேவனுடைய வசனத்தின்படி நம்முடைய பரிசுத்தமான வாழ்க்கை, நமது ஆத்தும பாரம் நிறைந்த தேவ ஊழியத்தினைக் கண்டு மக்கள் ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் திரும்பட்டும்.

''வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்'' (மத்தேயு 25 : 34) என்ற நம் அருமை ஆண்டவரின் குரல் கேட்கும் ஆனந்த நாளை எதிர் நோக்கியவர்களாக நமது அழைப்பின் பாதையிலே பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக நாம் உண்மையோடும், உத்தமத்தோடும் ஓடுவோம். அதற்கான கிருபைகளை ஆண்டவர்தாமே உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வாராக. ஆமென்

http://www.devaekkalam.com/401112/index.htm#drogam1

free web counter